சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கான சிறந்த கருவி என்பதை தனது 12 வயதிலேயே ஆழமாக உணர்ந்து செயற்பட்டுள்ளார் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஆல்டஸ் வின்சென்ட். அவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி Chilli Chips பக்கத்தில் வெளியாகியுள்ள 'மௌனமான அன்பு' குறும்படம் தற்போது இலங்கைத் தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'மௌனமான அன்பு' — தொழில்நுட்ப நேர்த்தியும் சமூக அக்கறையும்...
12 வயதில் பொம்மைகளையும் விளையாட்டுப் பொருட்களையும் கையாளும் பருவத்தில் கேமராவையும் திரைக்கதையையும் கையில் எடுத்து ஒரு சிறந்த சமூகக் கருத்துமிக்க படத்தை உருவாக்கியுள்ளார் ஆல்டஸ் வின்சென்ட். தெருக்களில் தூக்கி வீசப்படும் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் வாயில்லாப் பிராணிகள் மீது காட்ட வேண்டிய கருணையும் என இரண்டு முக்கிய சமூகக் கருத்துக்களை இந்தக் குறும்படத்தின் மூலம் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கதைக்களத்திற்கு ஏற்ப காட்சிகளை திட்டமிட்டு ஒளிப்பதிவாளர் B. அஜேந்திர பிரசாத் மற்றும் இசையமைப்பாளர் AJ சங்கர்ஜன் ஆகியோருடன் இணைந்து ஒரு தொழில்முறை இயக்குநருக்கு இணையான நேர்த்தியுடன் படத்தை உருவாக்கியுள்ளார் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
ThiraiMurasu-வின் வாழ்த்து...
"உனது பார்வையில் இருக்கும் தெளிவும் சமூகத்தின் மீதான அக்கறையும் கலையின் மீதான நேசமும் உன்னை எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பேசப்படும் மாபெரும் இயக்குநராக உயர்த்தும். உனது கனவுகளுக்கு இறக்கைகள் முளைக்கட்டும் — இலங்கைத் தமிழ் திரையுலகிற்கு நீ ஒரு நம்பிக்கை நட்சத்திரம்!"
இளம் இயக்குநர் ஆல்டஸ் வின்சென்டிற்கு ThiraiMurasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்